DreamLand

Wednesday, April 26, 2023

நியூசிலாந்து பயணம்! - Day 3

27-Dec-2022:   முந்தைய நாள் இரவில் கார்த்திக்கிற்கு காய்ச்சல் அதிகமாக அடித்து இருந்ததால் நாங்கள் பாராசிட்டமால் கொடுத்து தூங்க வைத்திருந்தோம். ஆனால் காலை எழுந்த பொழுதும் கார்த்திக்கிற்கு காய்ச்சல் தொடர்ந்தது. அதனால் ரெயின்போஸ் சாகச விளையாட்டு திடலுக்கு செல்வதால் வேண்டாமா என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தோம். ஆனாலும் முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து விட்டதால் அதை வீண் செய்ய வேண்டாம் என்று எண்ணி அங்கு சென்று வேடிக்கை மட்டுமாவது பார்த்து விட்டு வந்துவிடலாம் என்று முடிவு செய்து, காலை உணவு அருந்தியதும் கார்த்திக்கிற்கு மீண்டும் பாராசிட்டமால் கொடுத்து, ரெயின்போஸ் திடலுக்கு புறப்பட்டோம். 

காலையில் சீக்கிரமாக வந்து அனைத்து விளையாட்டுகளையும் ஓர் இரண்டு முறையாவது விளையாடினால்தான் கொடுத்த காசிக்கு பலன் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் நாங்கள் ரெயின்போஸ் திடலை வந்தடைந்த பொழுது மணி மதியம் 12 ஆயிருந்தது. திடலினுள் அவர்கள் வெளியிலிருந்து கொண்டுவரும் உணவு பொருட்களை அனுமதிப்பதில்லையாதலால் வெறும் தண்ணீர் பாட்டில்களை மட்டும் எடுத்துக் கொண்டு சென்றோம். 











முதலில் கிட்ஸ் கிங்டம் என்றழைக்கப்படும் சிறுவர்கள் விளையாடும் இடத்தை சென்றடைந்து, கார்த்திக்கை அங்கு சில ரைடுகள் விளையாட விட்டோம். அவனும் அங்கே குஷியாக விளையாடினான்; அப்போது அவனுக்கு காய்ச்சல் எங்கு சென்றிருந்தது என்றே எங்களுக்கு தெரியவில்லை. 


கிட்ஸ் கிங்டம் விளையாடி முடித்ததும் சிறிது மதிய உணவு அருந்திவிட்டு,  மூவரும் சேர்ந்து விளையாடுமாறு அமைந்திருந்த LOG FLUME மற்றும் DODGEMS ஆகிய இரண்டு விளையாட்டுகளை விளையாடி முடித்தோம். இதில் LOG FLUME என்பது தண்ணீரில் படகினில் மிதந்து சென்று, இறுதியில் உயரமான இடத்திலிருந்து சறுக்கிக் கொண்டு தண்ணீரினுள் விழுவது போல அமைந்திருந்தது. இறுதியாக தண்ணீரில் விழும் இடம் மிகவும் சரிவாக அமைந்திருந்ததால் திரில்லிங் ஆகவும், அப்போது தண்ணீர் நம் மீது தெறிப்பது உற்சாகமாகவும் இருந்தது.










DODGEMS என்பது பொம்மை கார் ஓட்டிச் சென்று மற்றவர்களின் மேல் இடிப்பது போல் அமைந்திருக்கும் Dashing Car விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டினை எத்தனை முறை விளையாடினாலும் கார்த்திக்கிற்கு போர் அடிப்பது இல்லை. 

பெரியவர்கள் விளையாடும் சில அட்வென்ச்சர் ரைடுகள் விளையாடலாம் என்று அந்த இடத்திற்குச் சென்றால், ஒவ்வொரு விளையாட்டிற்கும் நிறைய பேர் காத்துக் கொண்டு வரிசையில் நின்றிருந்தனர். ஒரு மணி நேரமாவது வரிசையில் நின்றால் தான் நமக்கு ஒருமுறையாவது வாய்ப்பு கிடைக்கும். சரி ஒரு ரைடாவது அப்படி விளையாடி விடலாம் என்று நீ வரிசையில் காத்துக் கொண்டிருந்தபோது கார்த்திக் மிகவும் சோர்வடைந்து இருந்தான்; அவனுக்கு காய்ச்சல் மீண்டும் எட்டிப் பார்த்தது. வெயிலும் சற்று அதிகமாகவே அடித்ததால் நாங்கள் சரி போதும் என்று எண்ணி வீட்டுக்கு செல்ல தயாரானோம்.

நாங்கள் தங்கியிருக்கும் வீட்டை அடைந்ததும் கோமதி கார்த்திக்கிற்கு அரிசி கஞ்சி தயார் செய்து கொடுத்தார். நான் அவர்கள் இருவரையும் வீட்டில் விட்டுவிட்டு அருகில் இருக்கும் St Heliers கடற்கரை வரை சென்று காலரா நடந்து விட்டு வந்தேன்.  நான் திரும்பி வந்ததும் இரவு உணவு அருந்திவிட்டு கார்த்திக்கு பேராசிட்டமால் மருந்தும் கொடுத்தோம். மறுநாள் காலை ரங்கிடாடோ தீவுகளுக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்தோம்; ரங்கிடாட்டோ தீவில் மலை உச்சி வரை நடந்து மேலேற திட்டமிட்டு இருந்ததாலும், கார்த்திக்கு அது இயலாத காரியம் ஆகிவிடும் மேலும் உடல் சோர்வடைந்து விடும் என்பதாலும், அந்த பயணத்தை தவிர்த்து விடலாம் என்று முடிவு செய்து இருந்தோம்.

மறுநாள் ஹேமில்டன் நகரில் நாங்கள் தங்குமிடத்திற்கு சென்று சேர வேண்டும் என்ற ஒன்று மட்டுமே திட்டமிட்ட நிகழ்வாகும். மற்றபடி மிகவும் தாமதமாக எழுந்து புறப்பட்டு வழியில் விருப்பம் போல சில இடங்களுக்கு செல்லலாம் என்றும், கார்த்திக்கை அதிக உடல் சோர்வு அடையாமல் பார்த்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்திருந்தோம். மறுநாள் திட்டமிட்ட சுற்றுலா இடங்கள் ஏதும் இல்லாததால், இரவு ஆக்லாந்து பாலத்தின் வழியாக சென்று ஆக்லாந்து நகரத்தின் அழகை ரசிப்பது என்று முடிவு செய்து இரவு உணவுக்குப் பிறகு அனைவரும் புறப்பட்டோம்.











ஆக்லாந்து பாலத்தின் வழியாக பயணித்து ஆக்லாந்து நகரத்தின் அழகை ரசித்துக்கொண்டு சல்பர் பீச் எனும் இடத்தை அடைந்தோம்.  ஆக்லாந்து பாலம் சிட்னி பாலத்தைப் போல மிகவும் பிரம்மாண்டமானது அல்ல; அது ஒரு மிகவும் சிறிய அளவிலான பாலம். ஆனாலும் அந்தப் பாலத்தின் வழியாக பயணிப்பது எங்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. சல்பர் பீச்சில் நின்று கொண்டும் ஆக்கிலாந்து நகரின் அழகை சிறிது ரசித்தவாறு சில புகைப்படங்களும் எடுத்துக்கொண்ட பிறகு மீண்டும் நாங்கள் தங்கியிருந்த வீட்டினை வந்தடைந்தோம்.

 இன்றைய நாள் இத்துடன் முடிந்தது

Wednesday, April 19, 2023

நியூசிலாந்து பயணம்! - Day 2

26-Dec-2022:  ஆக்லாந்து சுற்றுப்பயணத்தின் முதல் நாளாக, ரங்கிடாட்டோ தீவுகளுக்கு சென்று அதன் மலை உச்சி வரை ஏறி விட்டு இறங்குவது என்று முடிவு செய்து அந்த தீவுக்கு செல்லும் பெரிக்கு டிக்கெட் வாங்க சென்றோம். ஆனால் அன்றைய நாளுக்கான டிக்கெட் முழுவதும் விற்று தீர்ந்து விட்டதாகவும், வேண்டுமானால் நாளை அல்லது நாளை மறுநாளுக்கு இப்போதே முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறினர். அடுத்த நாள் ரெயின்போஸ் எண்டு என்று அழைக்கப்படும் சாகச விளையாட்டு திடலுக்கு முன்பதிவு செய்திருந்ததால், நாங்கள் அதற்கு மறுநாள் ரங்கிடாட்டோ தீவுகளுக்கு செல்ல டிக்கெட் புக் செய்தோம். 

அதற்குப் பிறகு எங்கு செல்வது என்று யோசித்துக் கொண்டே காலார நடந்து ஆக்லாந்து நகரின் கடற்கரையை சிறிது சுற்றிப் பார்த்தோம். அப்பொழுது மிக வேகமாக மழை பொழிய ஆரம்பித்தது. மழையில் நனைவதில் இருந்து எங்களை காப்பாற்றிக் கொள்ள அருகில் இருந்த நியூசிலாந்து மேரி டைம் மியூசியம் சென்றடைந்தோம்.

மியூசியம் உள்ளே உணவு அருந்துவதற்கு என்று இருந்த இடத்தில் இருந்து கடலின் மேல் மழை பொழிவதை ரசித்துக்கொண்டே, வீட்டிலிருந்து சமைத்து எடுத்து வந்த உணவை வயிறார உண்டோம். எங்கள் பயணத்திட்டத்திலேயே இல்லாத நியூசிலாந்து மேரீட் டைம் மியூசியம் மிகவும் சிறப்பாக இருந்ததால் அதை மட்டுமே நாங்கள் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் சுற்றிப் பார்த்தோம். 

பழங்கால முதல் தற்காலம் வரை பலவித கப்பல்களின் மாதிரிகள் அங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி நியூசிலாந்து நாட்டினர் பாய்மரக்கப்பல் செலுத்தும் போட்டிகளில் தங்க மெடல் வாங்கியதைப் பற்றிய நிகழ்வுகளும் அவர்கள் பயன்படுத்திய பாய்மரக் கப்பல்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 




நான் பணியில் இருக்கும் Oracle நிறுவனமும் இந்த பாய்மரக்கப்பல் செலுத்தும் போட்டியில் பங்கு பெற்ற பரிசில் பெற்ற நிகழ்வுகளை குறிப்பிட்டு இருந்தனர். நான்கு மணி அளவில் மியூசியம் சுத்தி பார்ப்பதை முடித்துவிட்டு வெளியில் வந்து அப்படியே காலாற நடந்து ஸ்கை டவர் என்று அழைக்கப்படும் உயரமான கட்டிடத்தை அடைந்தோம்.

கட்டிடத்தின் உச்சிக்குச் செல்ல முன்பே முன்பதிவு செய்து வைத்திருந்ததால் எங்கள் டிக்கெட்டுகளை காண்பித்து உச்சிக்கு செல்வதற்கான லிப்ட்டை அடைந்தோம். கார்த்திக் சற்று பயத்துடனே லிப்டில் ஏறினான். நாங்கள் வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டே உச்சியை அடையுமாறு லிப்டை வடிவமைத்திருந்தனர். அது அச்சத்தை மேலும் கூட்டுவதாக அமைந்திருந்தது.



கட்டிடத்தின் உச்சியில் கண்ணாடியால் ஆன தளம் ஓரிடத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. சுற்றுலா வாசிகள் சிலர் அதன்மேல் நடந்தும் இன்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர் ஆனால் எங்களுக்கோ திடீரென கண்ணாடி உடைந்து நாங்கள் கீழே விழுந்து விட்டால் என்ன ஆவது என்றும் மிகவும் அச்சமாக இருந்தது. அதனால் அங்கிருந்த உதவியாளரிடம் அந்த கண்ணாடி தளத்தைப் பற்றி கேட்டபோது, அவர் அருகே இருந்த குறிப்புகளை சுட்டிக்காட்டினார். அந்த குறிப்பை நாங்கள் படித்த போது அந்த கண்ணாடி தளம் கான்கிரீட் தளத்தைப் போன்றே உறுதியானது என்றும் அது உடைந்து நீங்கள் கீழே விழுந்து விட மாட்டீர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை படித்த பிறகு சற்றே தெம்புடன் நாங்கள் அந்த கண்ணாடி தளத்தின் மேல் நடக்க தயாரானோம். ஆனாலும் கார்த்திக் மிகவும் அச்சத்துடன் அந்த கண்ணாடி தளத்தின் மேல் நடக்க வரவே இல்லை சிறிது நேரம் கழித்து நாங்கள் அங்கு நின்றும், குதித்தும் காட்டிய பிறகு ஒரு வழியாக அவனும் கண்ணாடி தளத்திற்கு வந்து எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டான்.



அதேபோல கட்டிடத்தின் உச்சியில் இருந்து விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் நீங்கள் மேலிருந்து கீழே வழுக்கி கொண்டு செல்வது போல அமைக்கப்பட்டிருந்தது. அதற்கென நாம் உட்காரும் தளம் வேறு அங்கே வழுக்கி கொண்டு செல்வது போலவே சற்று உங்களையும் ஆட்டி வைக்கின்றது.  ஆனால் நாங்கள் டிக்கெட் புக்கிங் சென்று சேரும் நேரத்தில் அன்றைய நாளுக்கான விர்ச்சுவல் ரியாலிட்டி ஸ்லைடு புக்கிங் முடிந்து விட்டதாக கூறினர். ஆனால் நான் கார்த்திக்கை அருகே நிற்க வைத்து முகத்தை மிகவும் பாவமாக வைத்துக் கொண்டு அங்கேயே நின்றிருந்தேன். அதனைப் பார்த்த அந்தப் பெண்மணியும் சற்றே மனம் இளகி எங்களுக்கு ஒரு டிக்கெட் கொடுத்தார். நான் காத்திக்கையும் கோமதியையும் அந்த விளையாட்டை விளையாட செல்லுமாறு அனுப்பி வைத்தேன். 

Sky Slideன் அதிநவீன தொழில்நுட்பமானது உங்களை 100 கிலோமீட்டர் மெய் நிகர்(Virtual Reality) வேகத்தில் கட்டிடத்தின் உச்சியில் இருந்து ஒரு கண்ணாடி ஸ்லைடின் வழியாக கீழ் தளம் வரை அழைத்துக் கொண்டு செல்லும். நீங்கள் ஸ்லைடில் செல்லும் போது ஆக்லாந்து நகரத்தின் அழகை  திரில்லிங் உடன் கண்டு செல்லலாம்.  நீங்கள் VR ஸ்லைடில் செல்லும் பொழுது நீங்கள் அமர்ந்திருக்கும் தளம் அதற்கேற்றவாறு மேலும் கீழும் பக்கவாட்டிலும் உங்களை ஆட்டி வைப்பதால் நீங்கள் உண்மையாகவே அங்கே வழுக்கிக் கொண்டு செல்வது போல உணர்வீர்கள். கோமதிக்கும் கார்த்திக்கிற்கும் இது ஒரு திரில்லிங்கான அனுபவமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 



கட்டிடத்தின் உச்சியிலிருந்து ஆக்லாண்டு நகரம் மிகவும் அழகாக காட்சியளித்தது. சாகச விளையாட்டு விரும்பிகள் சிலர் ஸ்கை ஜம்ப் என்று அழைக்கப்படும் இடுப்பில் கயிற்றை கட்டிக்கொண்டு கட்டிடத்தின் உச்சியில் இருந்து குதிக்கும் விளையாட்டுகளை மேற்கொண்டிருந்தனர். AJ Hacket என்று அழைக்கப்படும் நிறுவனம் இந்த சாகச விளையாட்டினை அங்கே நிறுவி, விளையாட்டு விரும்பிகள் உற்சாகமாகவும் பாதுகாப்பாகவும் குதிப்பதற்கான பணியை மேற்கொண்டிருந்தது.

மாலை 6:30 மணிக்கு Sky Tower விட்டு வெளியே வந்தோம். அடுத்த நாள் ரெயின்போஸ் எண்டு சாகச விளையாட்டு திடலுக்கு புக் செய்திருந்ததால், இன்று சென்று நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணி நாங்கள் வீட்டினை அடைந்தோம். இரவு மிதமான உணவு சமைத்து உண்டு விட்டு உறங்கச் சென்றோம். அப்பொழுது தான் தெரிந்தது கார்த்திக்கு லேசாக காய்ச்சல் அடித்தது.

நியூசிலாந்து பயணம்! - 1st day

 25-Dec-2022: நியூசிலாந்து மற்றும் குயின்ஸ்லாந்து செல்ல மூட்டை முடிச்சுகள் அனைத்தையும் கட்டி தயாரான பிறகு உறவினர் சௌந்தர் அவர்கள் எங்களை விமான நிலையத்தில் டிராப் செய்ய வந்தார். நியூசிலாந்தில் செலவழிப்பதற்கு Forex Card வாங்கிக் கொண்டு சென்றிருந்தோம். இருந்தாலும் ஒரு 200 டாலர்கள் கையில் கேஷ் ஆக வைத்துக் கொள்ளலாம் என்று, பணத்தை மாற்றிக்கொள்ள விமான நிலையத்தில் இருக்கும் கரன்சி எக்ஸ்சேஞ்ச் ஆபீசுக்கு சென்றோம். ஆனால் அங்கு எக்ஸ்சேஞ்ச் ரேட் மிகவும் அதிகமாக இருந்தது; அதாவது 200 ஆஸ்திரேலியா டாலர்கள் கொடுக்கும் பொழுது வெறும் 175 நியூசிலாந்து டாலர்கள் மட்டுமே கிடைத்தது.  ஆனால் இதுவே பாரக்ஸ் கார்டு மூலம் ஒரு ஆஸ்திரேலியா டாலருக்கு ஒரு நியூசிலாந்து டாலர் என்ற அளவில் கிடைத்தது.

விமானம் செக்கின் செக்யூரிட்டி செக்கிங் மற்றும் குடியேற்ற செக்கிங் அனைத்தையும் முடித்து எங்களது விமானத்திற்கான நுழைவாயில் காத்திருப்பு அறையை அடைந்தோம். காத்திருப்பு அறையில் இருந்தபோது நாங்கள் கட்டி எடுத்துக்கொண்டு சென்றிருந்த பிரியாணியையும் நன்றாக சாப்பிட்டுவிட்டு விமானம் போர்டிங் அழைப்பு வருவதற்காக காத்துக் கொண்டிருந்தோம்.



4:40 மணி விமானத்திற்கான அழைப்பு எங்களுக்கு 4 மணிக்கு வந்தது அனைவரும் ஆர்வமுடன் விமானம் ஏற தயாரானோம். சிறுவர்கள் உடன் இருந்தால் விமானம் போர்டிங் செய்ய முன்னுரிமை அளிக்கப்பட்டதால் நாங்கள் முதலாகவே சென்று விமானம் ஏறி விட்டோம். முதலில் ஏறிய கார்த்திக் அவனுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்ததும் முன்னிருந்த தொடுதிரையில் என்ன என்ன வசதிகள் உள்ளன, எந்த கார்ட்டூன் திரைப்படங்கள் உள்ளன, எவ்வாறு மற்ற இருக்கையில் உள்ள பயணிகளுடன் அந்த தொடுதிரையின் வழியாகவே தொடர்பு கொள்வது என்று அனைத்தையும் ஆராய்ந்து கண்டுபிடித்து முடித்தார்.

அதுமட்டுமின்றி நமக்கு வேண்டிய உணவை நாம் தொடுகிறேன் வழியாகவே ஆர்டர் செய்ய வசதி இருந்தது. நாங்கள் இதற்கு முன்பு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த போது கூட மேலே பொத்தானை அழுத்தி, விமான பணிப்பெண் ஒருவரை இருக்கைக்கு வர வைத்து அவரிடம் தான் என்ன உணவு இருக்கிறது என்று கேட்டு தெரிந்து கொண்டு எங்களுக்கு இந்த உணவை வழங்குங்கள் என்று ஆர்டர் செய்ய முடியும். ஆனால் ஏர் நியூசிலாந்து விமானத்தில் எங்களுக்கு முன்பிருந்த தொடுதிரையின் வழியாக விமானத்தில் உள்ள உணவு, குடிநீர், குளிர்பானங்கள், மது வகைகள் என்று அனைத்தையும் கண்டறிந்து நமக்கு தேவையான உணவை நாமே தேர்வு செய்து ஆர்டர் செய்ய முடியும்.

விமானத்தில் வழங்கப்பட்ட உணவை உண்டு முடித்த பின்பு சிறிது நேரம் ஒவ்வொருவரும் திரைப்படம் பார்த்தோம். ஆஸ்திரேலியாவின் மெல்போன் நகருக்கும் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்கும் இடையிலான பயண நேரம் வெறும் மூன்றரை மணி நேரங்கள் என்பதால், எங்களுக்கு முழு திரைப்படம் பார்க்க கூட நேரம் போதவில்லை அதற்குள்ளாக விமானம் இரவு 10 மணியளவில் ஆக்லாந்து நகரை வந்தடைந்திருந்தது.



விமானம் தரை இறங்கியதும் குடியேற்ற சோதனை முடித்து எல்லை பாதுகாப்பு சோதனையை அடைந்தோம். நியூசிலாந்து நாட்டின் பயோ செக்யூரிட்டி சட்டதிட்டங்கள் மிகவும் கடுமையானவை! ஆஸ்திரேலியாவை போலவே! உணவுப் பொருட்கள், தாவரங்கள், விலங்குகளிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், ஏரி குளம் ஆறுகள் போன்று நல்ல நீரில் பயன்படுத்திய காலணிகள் ஆகியவற்றை அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் கொடுக்கும் படிவத்தில் நாம் கொண்டு வந்திருக்கும் பொருட்களை பட்டியலிட வேண்டும். நாம் படிவத்தில் பட்டியலிட்ட பொருட்களை பயோ செக்யூரிட்டி அலுவலர்கள் கண்டறிந்து எடுத்து குப்பையில் வீசி விடுவார்கள். நாட்டிற்குள் அனுமதிக்கப்படாத பொருட்கள் எதையாவது நாம் எடுத்துக் கொண்டு வந்திருந்து, அதை அவர்களின் விண்ணப்பத்தில் நாம் பட்டியலிடாமல் விட்டுவிட்டால்,  அதை அவர்கள் கண்டறிந்து எடுத்தால், அபராதம் மற்றும்/அல்லது சிறை தண்டனை இரண்டும் கிடைக்கும். அதனால் நல்ல பிள்ளையாக கொண்டு வந்த பொருட்களை நாங்கள் பட்டியலிட்டு விட்டோம்; ஏனென்றால் நாங்கள் வீட்டில் உணவு சமைக்க தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துச் சென்றிருந்தோம்.

அனைத்து சோதனைகளும் முடித்துவிட்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வரும் முன்பாகவே நியூசிலாந்தில் பயன்படுத்துவதற்காக தொலைபேசி சேவைக்கான சிம் கார்டை வாங்கினோம். சிம்கார்டை என்னுடைய செல்போனில் மாற்றிவிட்டு, நாங்கள் வடக்கு தீவில் பயன்படுத்துவதற்காக புக் செய்திருந்த பட்ஜெட் கார் ரெண்டல்(www.bargainrentalcars.co.nz) சர்வீஸ் அவர்களை தொடர்பு கொண்டோம். நாங்கள் தாமதமாக வந்து சேர்வதால் அவர்கள் ஃபிளையவே(flyaway) என்ற வேறு ஒரு நிறுவனத்துடன் இணைந்து எங்களுக்கு இரவு நேரங்களில் காரை வாடகைக்கு கொடுப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். எங்களை ஏர்போர்ட்டில் இருந்து பிக்கப் செய்ய அந்த ஃப்ளையவை நிறுவனம் காத்துக் கொண்டிருந்தது.

 அந்த இரவு 11:30 மணி அளவில் எங்களுக்கு எந்த தொந்தரவும் இன்றி வாடகை கார் வழங்கிய அந்த நிறுவனத்தை பாராட்டியே ஆக வேண்டும். காரை எடுத்துக்கொண்டு நாங்கள் ஆக்லாந்து தங்குவதற்கு airbnb வழியாக புக் செய்திருந்த அப்பார்ட்மெண்ட்டை வந்தடைந்தோம். புதிய இடம் என்பதாலும் இரவு நேரம் என்பதாலும் அந்த தெருவை வந்தடைந்த பிறகும், அந்த வீட்டை கண்டுபிடிப்பதில் எங்களுக்கு சற்று சிரமம் இருந்தது. ஒரு 20 நிமிட தேடலுக்குப் பிறகு airbnb செயலியின் வழியாக போட்டோக்களை சரிபார்த்து இந்த வீடு தான் என்று முடிவு செய்து வீட்டினை சென்று அடைந்தோம். மிகவும் சிறிய இடத்தை அனைத்து வசதிகளையும் கொண்டு மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்த வீடு அது; எங்கள் மூன்று பேருக்கு தங்குவதற்கு மிகவும் கச்சிதமாக இருந்தது.  அனைவரும் ஒரு குளியலை போட்டுவிட்டு உறங்குவதற்கு தயாரானோம்.


Tuesday, April 18, 2023

நியூசிலாந்து பயணம்! - The Planning

மகனுக்கு ஆறு வாரங்கள் பள்ளிக்கூடம் ஆண்டு இறுதி விடுமுறை, எனக்கும் மனைவிக்கும், கிருத்துமஸ் மற்றும் ஆங்கில புதுவருடத்தை ஒட்டி இரண்டு வாரங்கள் அலுவலக அடைப்பு!

அதனால் இரண்டு வாரங்கள் நியூசிலாந்து சுற்றுலா சென்று விடுமுறையை கழிப்பதென்றும், அதனைத் தொடர்ந்து இரண்டு வாரங்கள், பிரிஸ்பேன் நகருக்கு அருகே இருக்கும் டூவூம்பாவில் வசிக்கும் தங்கையின் வீட்டிற்கு சென்று, தங்கையின் வீட்டிலிருந்து அலுவலக பணியை தொடர்வது என்றும் முடிவுசெய்து, நான்கு மாதங்களுக்கு முன்பே பயணத்திட்டம் இறுதி செய்யப்பட்டது!

கணிப்பொறி பணியும், கொரோனா பிணியும், கொண்டுசேர்த்த நன்மை! மெல்போர்ன் மாநகரம், டூவூம்பா சிறுநகரம், புன்செய் புளியம்பட்டி சிற்றூர், என எங்கிருந்து வேண்டுமானாலும் அலுவலக பணியைத் தொடரலாம்! தேவையானவை இரண்டு: இணைய இணைப்பு, அலுவலக மேலாளரின் அரவணைப்பு!

பயணம் ஒரு இனிமையான அனுபவமென்றால், பயணத்தை திட்டமிடுதல், ஒரு சவாலான அனுபவம்! விமான இருக்கைகள், சுற்றுலாத் தளங்கள், சாகச விளையாட்டுகள், எந்த நேரத்தில் எங்கு செல்லவேண்டும், எப்படி செல்லவேண்டும், எதைச் செய்யவேண்டும், எந்த இடங்களைத் தவிர்க்கவேண்டும், பிள்ளையை எப்படி இரண்டு வாரங்கள் ஈடுபாட்டுடன் வைத்துக்கொள்வது, அனைவரும் எப்படி இரண்டு வாரங்கள் உடல்சோர்வு, மனச்சோர்வு இன்றி சுற்றுலாவை கழிப்பது, யாருக்கேனும் உடல்நிலை சரியில்லாவிட்டால், மாற்றுத்திட்டம் என்ன? என்று அனைத்தையும் திட்டமிடுதல் சவாலென்றால், திட்டவரைவை மனைவியிடம் சமர்ப்பித்து ஒப்புதல் வாங்குவது அதைவிட மிகப்பெரிய சவால்!

கிருத்துமஸ் நாளன்று ஆஸ்திரேலியாவில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கையில் குறைவு என்பதால் அன்றைய நாள் புறப்படுவது என்றும், சனவரி 8ம் நாள், நியூசிலாந்தில் இருந்து டூவூம்பா செல்வதென்றும், இரண்டு வாரங்களுக்குப் பிறகு, சனவரி-21ம் நாள், டூவூம்பாவில் இருந்து புறப்பட்டு மெல்போர்ன் வந்தடைவது என்றும் முடிவு செய்திருந்தோம்.

இதனிடையே, நியுசிலாந்தில் எந்த நகரங்களுக்கு செல்வது, அங்கு எத்தனை நாட்களை கழிப்பது என்று அலசியபோது, அங்கு வடக்கு மற்றும் தெற்கு என இரண்டு தீவுகள் இருப்பதும், வடக்கு தீவில் எரிமலை, வெந்நீர் ஊற்றுகள் போல புவிவெப்ப செயல்பாடுகள்(Geothermal activities) அதிகம் இருப்பது, தெற்கு தீவில் எழில் கொஞ்சும் மலைகளும், ஏரிகளும், சாகச விளையாட்டுகள் நிறைந்திருப்பதும் தெரியவந்தது. இரண்டில் எங்கு அதிக நேரத்தை செலவிடுவது என்ற குழப்பத்தில், இரண்டு நிலப்பரப்பிலும் சரியாக ஒரு வாரம் செலவிடுவது என்று முடிவானது.

வெளிநாடு சுற்றுலா செல்வது என்று முடிவான பிறகு முதலில் செய்ய வேண்டிய இரண்டு காரியங்கள்: வீசா வாங்குவது மற்றும் விமானத்தில் இருக்கைகள் முன்பதிவு செய்வது. மற்ற நாடுகளைப் போலவே நியூசிலாந்து நாட்டிற்கும் பயணம் மேற்கொள்ள எந்த விசா வாங்குவது என்று தேடிய போது ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்கு நியூசிலாந்தில் இ-விசா வழங்கப்படுகிறது என்கிற விவரம் அறிந்து அந்த இ-விசாவினை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து உடனடியாக கிடைக்கப் பெற்றோம்.

விமானத்திற்கு இருக்கைகள் முன்பதிவு செய்ய ஜட் ஸ்டார், வெர்ஜின் ஏர்லைன்ஸ் போன்ற விமானங்களை நான் பார்த்துக் கொண்டிருக்க மகனோ, ஏர் நியூசிலாந்து விமான சேவையை ஒரு முறை பார்க்கச் சொன்னார். அப்பொழுது வரை ஏர் நியூசிலாந்து என்கிற விமான சேவை இருப்பது கூட எனக்கு தெரிந்திருக்கவில்லை. 

அந்த விமானத்திற்கான இணையதளத்தில் தேடியபோது மற்ற விமான சேவைகளை விட, ஏர் நியூசிலாந்து விலை குறைவாகவும், பயண நேரம் எங்களுக்கு மிகவும் வசதியாகவும் அமைந்தது. நியூசிலாந்து பயணத்தை முடித்துவிட்டு தங்கையின் ஊரான டூவூம்பா செல்ல திட்டம் இருந்ததால், மெல்போன் வந்து விட்டு மீண்டும் டூவூம்பா செல்வதென்றால் ஒரு விமானத்திற்கான செலவு அதிகம் பிடிக்கும் என்பதாலும் நாங்கள் நியூசிலாந்து பயணத்தை முடித்த பிறகு நேராக பிரிஸ்பேன் சென்றடைவது என்று முடிவு செய்து பிரிஸ்பேன் நகருக்கு புக் செய்தோம்.

Melbourne -> Auckland -> Queenstown -> Brisbane -> Melbourne

பிரிஸ்பின் நகரில் இருந்து மேல் போன் திரும்பி வருவதற்கு மட்டும் ஜெட்ஸ் ஸ்டார் விமானத்தில் புக் செய்தோம்.  ஏனென்றால் ஏர் நியூசிலாந்து விமானங்கள் ஆஸ்திரேலியா நாட்டிற்கு உள்ளாக மட்டும் பயணிக்க விமான சேவைகளை வழங்குவதில்லை.

விமானத்தில் டிக்கெட் புக் செய்வது வெறும் முதல் பணி மட்டுமே. ஆனால் டிக்கெட் புக் செய்த பிறகு நியூசிலாந்து செல்வதற்கான ஆர்வம் மற்றும் ஜுரம் எங்களை பற்றி கொண்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளுக்குமான சுற்றுலா தளங்கள், சாகச விளையாட்டுக்கள்,  ஊர் சுற்றிப் பார்க்க நாமே டிரைவ் செய்து கொள்ளும் கார் மற்றும் தங்குமிடம்  ஆகியவற்றுக்கான திட்டமிடுதல் மற்றும் புக்கிங் அனைத்தும் செய்து முடித்தோம். அனைத்தையும் முடித்த பிறகு 25 டிசம்பர் 2022 நாளை நோக்கி மிகவும் ஆர்வமுடன் காத்திருந்தோம்; அந்த நாளும் வந்தது.