DreamLand

Monday, May 19, 2025

நியூசிலாந்து பயணம்! - Day 14

07-Jan-2023:  இன்று காலை எழுந்ததும் வழக்கம் போல, காலை உணவுக்குப் பிறகு, எங்கள் உடைமைகளை காரில் ஏற்றிக்கொண்டு, டிமாரு நகரில் இருந்த புனித இருதய பசிலிக்கா(Sacred Heart Basilica) சென்றோம்.



அதன் பின்னர் குயின்ஸ் டவுன் நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது. Google Map ஆனது குயின்ஸ் டவுன் செல்ல இரண்டு வழிகளை காண்பித்தது. ஒரு வழியில் நான்கு மணி நேரமும் இன்னொரு வழியில் நான்கரை மணி நேரமும் ஆகும் என்று காட்டியது. நான்கரை மணி நேரம் எடுத்துக் கொள்ளும் வழியில் இரண்டு ஏரிகள் தென்பட்டன. அந்த இரண்டு ஏரிகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று கூகுளில் தேடிய போது வந்த புகைப்படங்களில் அந்த ஏரிகள் மிகவும் அழகாக காட்சியளித்ததால் நாங்கள் நான்கரை மணி நேர வழியை தேர்ந்தெடுத்தோம்.

டீகாப்பு ஏரி(Lake Tekapu)

நாங்கள் இந்த நான்கரை மணி நேர வழியை தேர்ந்தெடுப்பதற்கு இன்னும் ஒரு காரணம், இது கிரைஸ்ட்சர்ச் நகரையும், குயின்ஸ் டவுன் நகரையும் இணைக்கும் சாலையின் பாதி தொலைவை நாமும் பயணிக்கலாம் என்பதுதான்.

டீகாப்பு ஏரி கூகுள் காட்டிய புகைப்படங்களில் இருந்ததை விடவும் நேரில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. 



இந்த ஏரி க்ரைஸ் சர்ச் மற்றும் குயின் டவுன் நகரை இணைக்கும் சாலையின் ஓரத்திலேயே அமைந்திருப்பதால் அதை அடைவது மிகவும் எளிதாக இருந்தது. காரினை ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு, சாலையை குறுக்காக கடந்து நாங்கள் அந்த ஏரியை அடைந்தோம். ஏரிக் கரையில் சற்று நேரம் காலாற நடந்து விட்டு, அந்த தெளிவான நீரில் துள்ளி விளையாடும் மீன்களைக் கண்டு ரசித்து விட்டு, அந்த ஏரியின் மற்றும் ஒரு ஓரத்தில் அமைந்திருந்த நல்ல மேய்ப்பனின் திருச்சபையை(Church of the good Sheperd) அடைந்தோம்.


1935 ஆம் ஆண்டு கற்களால் கட்டப்பட்ட இந்த சிறிய Anglican சர்ச், தொடக்க காலத்தில் இங்கு குடியேறிய மக்களின் நினைவாக இன்றும் உள்ளது. இது நியூசிலாந்து நாட்டில் அதிக புகைப்படங்கள் எடுக்கப்படும் கட்டிடங்களில் ஒன்றாகும். அதற்கு காரணமாக நான் நினைப்பது அந்த சர்ச் அமைந்துள்ள டிகாப்பு ஏரியாகும்.

புகாகி ஏரி(Lake Pukaki) & ஆரோக்கி(Aoraki)

டீகாப்பு ஏரியிலிருந்து 30 நிமிட பயண தொலைவில் அமைந்திருந்தது புகாகி ஏரி. இந்த இரண்டு ஏரிகளும் நீயா நானா என்று போட்டி போடும் அளவிற்கு ஒன்றை ஒன்று மிஞ்சும் அழகை கொண்டிருந்தன. புகாகி ஏரியின் ஒரு புறத்தில் மாநில நெடுஞ்சாலை ஒன்று அமைந்துள்ளது அந்த நெடுஞ்சாலை நம்மை ஆரோக்கி(Aoraki) மலைத்தொடரின் அடிவாரத்திற்கு கூட்டிச் செல்கின்றது. இந்த ஆரோக்கி மலைத்தொடர் Mount Cook என்றும் அழைக்கப்படுகிறது.


நியூசிலாந்து நாட்டிலேயே உயரமான மலை என்றும் அறியப்படுகிறது. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 3724 மீட்டர்கள் அதாவது 12,218 அடிகள்.  இது நியூசிலாந்து நாட்டில் கோடை காலம் என்றாலும், ஆரோக்கி மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்த ஏரிகளில் நன்றாக குளிரடிக்கவே செய்தது. வானிலை தெளிவாக இருக்கும் நாட்களில், அதாவது மேகங்கள் ஏதுமின்றி சூரியன் நன்றாக ஒளிரும் நாட்களில், புகாக்கி ஏரியின் கரையில் இருந்து, மறுபுறம் தொடங்கும் ஆரோக்கிய மலைத்தொடரினை தெளிவாகக் கண்டு களிக்கலாம். சுற்றுலா வாசிகளும், மலையேற்றத்தில் ஆர்வம் உடையவர்களும், கட்டாயம் தங்கள் வாழ்வில் ஒரு முறை வந்து பார்க்க வேண்டிய இடம் இந்த Aoraki மலைத்தொடர்.

ஆனால் இந்த மலைத்தொடர் பற்றிய தகவல்கள் எங்களுக்கு முன்பு தெரிந்திருக்கவில்லை. அதனால் நாங்கள் இந்த மலைத்தொடருக்கு செல்வதற்கு திட்டமிட்டு இருக்கவில்லை. இந்த மலைத்தொடர் பற்றிய தகவல்கள் அனைத்தும், புகாகி ஏரியில் அமைந்திருந்த தகவல் மையத்திலிருந்து கிடைக்கப்பெற்றது. இந்த மலைத்தொடரை பார்ப்பதற்காகவே மீண்டும் ஒருமுறை நியூசிலாந்து வரவேண்டும் என்று முடிவு செய்து கொண்டு கிளம்பினோம்.





அதன் பின்னர் பல சிறிய மலைகளுக்கு நடுவே அமைக்கப்பட்டு இருந்த அழகான சாலையில் வழுக்கி கொண்டே நாங்கள் குயின் டவுன் நகரை நோக்கி கிளம்பினோம். கவரு தொங்கு பாலம் நாங்கள் செல்லும் வழியிலேயே அமைந்திருந்ததால், நாங்கள் மீண்டும் ஒருமுறை அங்கே சென்று பார்வையிட்டு விட்டு, ஒரு டீசர்ட் ஒன்றை நினைவு பரிசாக வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.

அன்று இரவு நாங்கள் தங்குவதற்கு முன்பதிவு செய்து இருந்த இடம் குடும்பங்கள் தங்குவதற்கு என்று அமைக்கப்பட்ட விடுதி அல்ல. சிறிய முதுகுப்பையுடன் பயணிக்கும், பயணிகளுக்கான தங்கும் விடுதி(Southern Laughter Backpackers). ஆனால் நாங்கள் இரவு தாமதமாகவே வருவோம், காலையிலும் விமானத்தை பிடிக்க சீக்கிரமாக கிளம்பி விடுவோம் என்பதாலும், அந்த குறிப்பிட்ட நாளுக்கான வாடகை மற்ற இடங்களில் மிகவும் அதிகமாக இருந்ததாலும், நான் அந்த இடத்தை தேர்வு செய்திருந்தேன்.

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்த தங்கும் விடுதியில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை. அதனால் மூன்று பெரியவர்கள் என்று குறிப்பிட்டு முன்பதிவு செய்திருந்தேன். ஆனால் கார்த்திக்கை, தங்கும் விடுதியில் வேலை செய்பவர்களோ, மேலாளரோ, பார்த்து விடாமல் உள்ளே கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என்பதால், நாங்கள் காரினை நிறுத்திவிட்டு, வரவேற்பு அறைக்கு நான் மட்டும் தனியாக சென்று, அறைக்கான சாவியை வாங்கிக்கொண்டு, வந்து காரில் இருந்து அந்த ஒற்றை இரவுக்கு தேவையான ஆடைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, அறையில் சென்று வைத்துவிட்டு, அந்த  அறைக்கு செல்லும் வழிகளை ஆராய்ந்து பின்புறமாக இருந்த வழியாக கார்த்திகை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றேன்.

நாங்கள் சற்று புத்துணர்ச்சி ஏற்படுத்திக் கொண்டு இரவு உணவுக்காக உலக பிரசித்தி பெற்ற ஃபெக் பர்கர் கடையை நோக்கி சென்றோம். முன்பு பார்த்ததைவிட கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. 



ஆளுக்கு ஒரு பர்கரை வாங்கிக்கொண்டு, வக்காடிப்பு ஏரிக்கரையில் அமர்ந்து பர்கரை ரசித்து உண்டோம். உலகப் பிரசித்தி பெற்ற பர்கர் என்ற பெயர் சோடை போகவில்லை; அந்த பர்கர் மிகவும் நன்றாகவே இருந்தது. பின்பு நகரை சுற்றி காலாற நடந்தோம்; நகரில் பல நாட்டைச் சேர்ந்த உணவகங்கள் அமைந்திருந்தன. நாங்கள் ஒரு கடைக்குச் சென்று நினைவு பரிசாக பல டீசர்ட்டுகளை வாங்கிக் கொண்டு டீ சர்ட்டுகளை தங்குமிடம் வந்து சேர்ந்தோம். நன்றாக உறங்கினோம். நாளை காலை நியூசிலாந்துக்கு டாட்டா காட்டிவிட்டு விமானம் ஏறி பிரிஸ்பேன் செல்ல வேண்டும்.

08-Jan-2023:  இன்று காலை நியூசிலாந்துக்கு tata சொல்லி விட்டு கிளம்ப இருக்கிறோம். காலையில் எழுந்து குளித்து ஆயத்தமாகி, காலை உணவிற்கு அந்த தங்கும் விடுதியில் இருந்த சமையல் அறைக்குச் சென்றோம். அந்த சமையலறை அங்கு இருக்கும் அனைவருக்கும் பொதுவானது. அங்கிருக்கும் சமையல் பாத்திரங்களும் அனைவரும் பயன்படுத்தக் கூடியவை. 

அதனால் அனைவருக்கும் பொதுவான விதிமுறைகளை எழுதி ஒட்டி வைத்திருந்தனர். அதாவது அவரவர் பயன்படுத்தும் பாத்திரங்களை அவர்கள் அப்பப்போது சுத்தம் செய்து வைத்து விட வேண்டும் என்றும், சமையலுக்கு பயன்படுத்தும் மூலப் பொருட்களை, குளிர் பதன பெட்டியில் வைப்பதாக இருந்தால் உங்கள் பெயர் எழுதி வைத்து விட வேண்டும் என்றும், மற்றவர்களுடைய மூலப் பொருட்களை நீங்கள் பயன்படுத்தக் கூடாது என்றும், நீங்கள் பயன்படுத்தும் பொழுது பொருட்கள் தரையில் சிந்தி விட்டாலோ உலகின் மீது சிந்திவிட்டாலோ, நீங்களே சுத்தப்படுத்தி வைக்க வேண்டும் என்பது போன்ற விதிமுறைகள் அங்கே எழுதி வைத்திருந்தது மட்டுமில்லாமல், அதை அனைவரும் கடைப்பிடித்தனர். அதனால் அந்த சமையலறை மிகவும் தூய்மையானதாகவே இருந்தது. நாங்கள் மிக சீக்கிரமாகவே காலை உணவை முடித்துவிட்டு, தங்கி இருந்த அறையையும் காலி செய்து விட்டு கிளம்பினோம்.

முதல் வேலையாக எங்களது காரினை திரும்ப ஒப்படைப்பதற்காக கார் வாடகைக்கு விடும் நிறுவனத்தை அடைந்தோம். நாங்கள் காருக்கு முழுமையான காப்பீடு எடுத்திருந்ததால், எங்களது தவறால் ஏதேனும் விபத்து ஏற்பட்டு காருக்கு சேதம் அடைந்தாலும், நாங்கள் கையில் இருந்து ஒரு பைசா கூட கொடுக்கத் தேவையில்லை. 

அதனால் காரினை திருப்பி ஒப்படைக்கும் போது அவர்கள், சாவியை மட்டும் வாங்கி வைத்துக் கொண்டு நன்றி சொல்லி அனுப்பி விடுகின்றனர். நாம் முழுமையான காப்பீடு எடுத்து இருக்காவிட்டால், அவர்கள் நமது காரினை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து, சிறிய கீறல் இருந்தால் கூட அதற்கு நம்மிடம் பணம் வசூலித்து விடுவர்.

காரினை ஒப்படைத்ததும் அவர்களுடைய வாகனத்திலேயே நம்மை விமான நிலையத்தின் உள்ளே இறக்கி விட்டனர். நாம் டிக்கெட் பரிசோதனை அனைத்தையும் முடித்துவிட்டு, 11:15 மணிக்கு தான் விமானம் என்பதால் அதுவரை சற்று ஓய்வெடுத்தோம். 10:45 மணிக்கு விமானத்தில் ஏறுவதற்கு அழைப்பு வந்தது. நாங்கள் மீண்டும் குயின்ஸ்டவுனுக்கு டாட்டா சொல்லிவிட்டு விமானத்தில் ஏறினோம்.


இப்போது விமானம் நியூசிலாந்து நாட்டின் தலைநகரமான வெல்லிங்டன் நகரை நோக்கி பயணித்தது. மீண்டும் ஒருமுறை விமானத்திலிருந்து குயின் டவுன் நகரத்தையும், நகரில் இருக்கும், மற்றும் நகரத்தைச் சுற்றி இருக்கும் ஏரிகளின் அழகையும், ஏரிகளுக்கு நீரினை வழங்கிக் கொண்டிருக்கும் மலைகளின் அழகையும், ரசித்துக்கொண்டே வெல்லிங்டன் நகரை அடைந்தோம்.



மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படம், வானகா ஏரி மற்றும் ஹவியா ஏரி இரண்டும் இணையும் இடம். அதன் கூகுள் மேப் படமும் உங்களுக்காக இணைத்துள்ளேன்.  கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படம், நியூசிலாந்து நாட்டின் வட தீவுக்கும் தென் தீவுக்கும் இடையில் அமைந்துள்ள Tasman கடல் பகுதி ஆகும்




வெலிங்டன் நகரின் விமான நிலையத்தை அடையும் போது, மதிய உணவு நேரம் ஆகி இருந்ததால் நன்றாக பசி எடுத்தது. கார்த்திக் சப்வேயில் மதிய உணவு வேண்டும் என்று கேட்டதால், சரி அனைவரும் அங்கேயே மதிய உணவை வாங்கிக் கொள்ளலாம் என்று, வாங்கி உண்டோம். எனக்கும் கோமதிக்கும் அந்த உணவு அவ்வளவாக பிடிக்கவில்லை, ஆனால் கார்த்திக் அதை ரசித்து உண்டான். மதியம் மூன்றரை மணிக்கு வெல்லிங்டன் நகரில் இருந்து விமானம் ஏறி பிரிஸ்பேண் சென்றடைந்தோம். இத்துடன் எங்களின் நியூசிலாந்து முதல் பயணம் முடிவுக்கு வந்தது, நீங்கள் அனைவரும் எங்களுடன் தொடர்ந்து பயணித்ததற்கு நன்றி.


Friday, May 16, 2025

நியூசிலாந்து பயணம்! - Day 13

06-Jan-2023: இன்று காலை மீண்டும் தங்கி இருந்த அறையை காலி செய்துவிட்டு, உடமைகள் அனைத்தையும் காரில் ஏற்றிக்கொண்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். Dunedin நகரத்தில் மூன்று முக்கியமான இடங்களை பார்க்கத் திட்டமிட்டு இருந்தோம். 

Dunedin Chinese Garden

அதில் முதலாவது ஆக டியுனிடின் சைனீஸ் தோட்டம். சுற்றுலா வழிகாட்டி என்று யாரும் இல்லாமல் வெறுமனே சுற்றிப் பார்த்தால், பெரிதாக ஒன்றும் புரிவதில்லை. அங்கே சுற்றுலா வழிகாட்டி என்று யாரும் இருக்கவும் இல்லை. ஆனால் அந்த தோட்டத்தை மிகவும் அழகாக அமைத்திருந்தனர். தோட்டத்தின் நடுவே நீரோட்டத்திற்கான வழியும், அந்த நீரினுள் வாத்துகளும், சில மீன்களும் இருந்தன. 




First Church of Otago

சைனீஸ் தோட்டத்திலிருந்து வெளியில் வந்ததும், அடுத்ததாக நாங்கள் சென்ற இடம், ஒட்டகோ மாகாணத்தின் முதல் சர்ச். ஸ்காட்லாந்து நாட்டிலிருந்து முதலில் நியூசிலாந்துக்கு குடியேறிய நபர்களால், செப்டம்பர் 1848 ஆம் ஆண்டு முதலில் இந்த சர்ச் மரப்பலகைகளைக் கொண்டு கட்டி எழுப்பப்பட்டது. 



அதன்பின்னர் இரண்டு முறை உருமாற்றம் அடைந்த இந்த சர்ச், தற்போது இருக்கும் பிரம்மாண்டமான கட்டிடமாக 1873 ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. 

இதற்குள் மதிய உணவு நேரம் ஆகிவிட்டது, பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. அதனால் அருகில் உள்ள பூங்காவில் அமர்ந்து, நாங்கள் காலையிலேயே சமைத்து எடுத்துக் கொண்டு வந்திருந்த சாதம் மற்றும் இறால் குழம்பை நன்றாக ரசித்து ருசித்து சாப்பிட்டோம்.

Steepest Street in the World

இதற்கு அடுத்து நாங்கள் சென்ற இடம் உண்மையிலேயே ஒரு விசித்திரமான இடம். அந்த விசித்திரம் என்னவென்றால் உலகிலேயே அதிக செங்குத்தான தெரு என்றால் அது டியூனீடின் நகரத்தில் உள்ள பால்டுவின் தெரு(Baldwin Street) ஆகும்.





தெருவின் சரிவுத்தன்மை திட்டமிடப்படாததாக இருந்தது. ஆரம்ப கால டியூனீடின் பல பகுதிகளிலும், நியூசிலாந்தின் பல இடங்களிலும் போல, ஒரு கட்டவிழை வடிவத்தில்(Grid Pattern) திட்டமிடப்பட்டன; பெரும்பாலும் லண்டனில் உள்ள திட்டமிடுபவர்கள் இதைச் செய்தனர். இந்த தெரு, ஓடாகோ மாகாண சபை உறுப்பினரும், செய்தித்தாள் நிறுவனருமான வில்லியம் பால்ட்வின் என்பவரின் பெயரில் பெயரிடப்பட்டது. அவர் இந்த பகுதிகளை உட்பிரிவு செய்து அளித்தவர் என கூறப்படுகிறது.

1987 ஆம் ஆண்டு இந்தத் தெரு கின்னஸ் சாதனை புத்தகத்தில் உலகில் மிகவும் செங்குத்தான தெருவாக இடம் பெற்றது. ஆனால் 2019 ஆம் ஆண்டு, Wales நகரத்தில் உள்ள Ffordd Pen Llech தெரு அந்தப் பெருமையை தட்டிச் சென்றது. ஆனாலும் கின்னஸ் சாதனை அமைப்பாளர்கள், தெருவின் சரிவை அளந்த முறை தவறு என்று டியூனிடின் நகரத்தில் வசிக்கும் மக்கள் முறையிட்டதின் காரணமாக, அந்த முறை மீண்டும் சரிபார்க்கப்பட்டு, 2020 ஆம் ஆண்டு உலகின் செங்குத்தான தெருவாக மீண்டும் பால்டுவின் தெரு அறிவிக்கப்பட்டது.

இத்துடன் டியூனிடின் நகரத்தில் பார்க்க வேண்டிய இடங்களை முடித்துக் கொண்டு, ஓமாரு நகரத்தின் வழியாக நாங்கள் தங்குவதற்கு முன் பதிவு செய்திருந்த டிமாரு நகரத்தை அடைவதற்கான பயணத்தை தொடங்கினோம்.

டீமாரு நகரம்

டீமாரு ஊரில் ஒரு மோட்டலில்(Anchor Motel42 Evans Street, Timaru, 7910, New Zealand) தங்குவதற்காக முன் பதிவு செய்திருந்தோம். அந்த மோட்டலைச் சென்றடைந்து, ஒரு இரவு தங்குவதற்கு வேண்டிய பொருட்களை மட்டும் காரிலிருந்து எடுத்துக்கொண்டு, எங்களுக்கென்று ஒதுக்கப்பட்டு இருந்த அறையை அடைந்தோம். 

அது மோட்டலாக இருந்தாலும், சற்று பழைய மோட்டலாகவே இருந்தாலும், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை, ஒரு படுக்கையறை வசதி கொண்ட ஒரு வீடு போலவே பெரியதாக இருந்தது. நாங்கள் நிறைய இடம் சுற்றுவதால், விலை மிக அதிகமாக இருக்கும் உயர்தர தங்கும் விடுதிகளை தேர்ந்தெடுப்பதில்லை. ஏனென்றால் நாங்கள் நிறைய இடங்கள் சுற்றிப் பார்த்துவிட்டு இரவு உறங்குவதற்கு மட்டுமே தங்குமிடத்திற்கு வருவதால், முடிந்த அளவு தங்குமிடத்திற்கு செலவு செய்யும் பணத்தை குறைவாகவே செலவிடுவோம். 

அனைவரும் ஒரு முறை குளித்து, புத்துணர்ச்சியான பிறகு, எங்கு செல்லலாம் என்று யோசித்தால் அந்த ஊரில் பார்ப்பதற்கு ஆகச் சிறந்த இடங்கள் என்று எதுவும் இருக்கவில்லை. 

கடற்கரை மிகவும் அருகில் இருந்ததால், கால்நடையாக கடற்கரைக்குச் சென்று சிறிது நேரம் உலாவினோம்.  கடற்கரையில் உலாவிக் கொண்டிருந்த பொழுது, சற்றே தொலைவில் பொருட்காட்சி அமைத்திருப்பது தெரிந்தது. சரி பொழுது போக்க பொருட்காட்சி செல்லலாம் என்று மோட்டலுக்குச் சென்று எங்கள் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினோம். அங்கே சென்று, கார்த்திக்கும் கோமதியும் சில தூரிகள் விளையாடினர்.






அதுமட்டுமா பொருட்காட்சி என்றால் சாப்பாடு இல்லாமல் இருக்குமா அதுவும் இங்கே கிடைக்கும் பர்கர், சூடான நாய்( அதாங்க Hot Dog) போன்ற உணவுகளை பார்த்து விட்டால் கார்த்திக் கண்டிப்பாக ஒன்று கேட்பான். அவன் கேட்டதை வாங்கி கொடுத்து அவன் சாப்பிட்ட பிறகு, எங்கள் மோட்டலைச் சென்றடைந்தோம்.  அன்று இரவு நன்றாக உறங்கி ஓய்வெடுத்தோம்.

Thursday, May 15, 2025

நியூசிலாந்து பயணம்! - Day 12

05-Jan-2023: காலை 9 மணிக்கு எல்லாம் நாங்கள் தங்கி இருந்த வீட்டை காலி செய்துவிட்டு, Dunedin நோக்கி புறப்பட்டோம். Dunedin சென்றடைய மூன்றரை மணி நேரம் பயணம் மட்டுமே. அதனால் வழியில் Cromwell நகரத்திற்கு சற்று முன்பாக அமைந்துள்ள, Highlands Motor Park, செல்ல திட்டமிட்டு இருந்தோம். 

இந்த மோட்டார் பார்க்கில் உள்ள அருங்காட்சியகத்தில், கார் பந்தயத்தில் பயன்படுத்தப்பட்ட கார்களும், சில பழைய கார்களும்(Classic Cars), சில அதி உயர்நிலை கார்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 




மேலும் இந்த இடத்தின் சிறப்பம்சம் என்பது, கார் பந்தயத்தில் பயன்படுத்தப்படும் கார்களில் நீங்கள் ஒரு சவாரி மேற்கொள்ளலாம். அந்தக் கார்களை கையாளத் தெரிந்த ஒரு டிரைவர்,  உங்களை முன் சீட்டில் அமர வைத்து, உங்களுக்காக, அந்த கார்களை அதிவேகமாக இயக்கி காட்டுவார்.  அதிவேகம் என்றால் எவ்வளவு என்று கேட்பவர்களுக்கு, அது 225 KMPH. அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க விடுவதற்கு நீங்கள் தயாரானால், கண்டிப்பாக நீங்கள் அந்தக் கார்களில் ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும்.  இந்த சவாரிக்கு கட்டணமாக 200 நியூசிலாந்து டாலர்கள் வசூலிக்கின்றனர்.

அந்தக் கார் அருங்காட்சியகத்தின் ஒரு ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த வீடியோ கேமை கார்த்திக்கும் கோமதியும் விளையாடினர்.  அதற்குப் பிறகு Go-Karting செல்வது என்று முடிவு செய்தோம்.  ஒரு சுற்று மட்டும் முன்பதிவு செய்தால் 54 நியூசிலாந்து டாலர்கள் என்றும் இரண்டு சுற்றுகளை சேர்த்து முன்பதிவு செய்தால் மொத்தம் 79 நியூசிலாந்து டாலர்கள் என்றும் அவர்கள் விலை நிர்ணயித்து இருந்தார்கள். ஒரு சுற்றில் நான் கார்த்திக் உடன் செல்வது என்றும் இரண்டாவது சுற்றில் கோமதி கார்த்திக் உடன் செல்வது என்றும் முடிவு செய்து, நாங்கள் இரண்டு சுற்றுக்களுக்கு முன்பதிவு செய்தோம். 

Go-Karting காரில் ஏழு வயது சிறுவர்களை அனுமதித்தாலும், அவர்களுக்கு வாகனத்தை இயக்குவதற்கான டிரைவர் இருக்கையில் அமர அனுமதிப்பதில்லை. ஆக்ஸிலரேட்டர் மற்றும் பிரேக் இரண்டும் டிரைவரின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்தாலும், அருகே அமர்ந்து வரும் நபருக்கு Steering Wheel கட்டுப்பாடு உண்டு. நாங்கள் இருவரும் தலைக்கவசத்தை அணிந்து கொண்டு Go-Karting காரில் புறப்பட தயாரானோம்.


முதல் சுற்று வாகனங்கள் வரிசையாக கிளம்பின. நான் நன்றாகவே காரை செலுத்திக் கொண்டிருந்தேன். ஆனால் ஸ்டியரிங் வீல் கண்ட்ரோல் கார்த்திக் இடம் இருந்ததால், அவன் விசுக் விசுக்கென்று திருப்பினான். அவன் திருப்பிய திருப்பலில் என் வயிற்றை திருகி வாந்தி வரும் நிலை ஆகிவிட்டது.  காரினை திருப்பியதால் வாந்தி வரும் நிலை ஏற்பட்டது ஒருபுறம் என்றால், காரில் இருந்து வரும் பெட்ரோல் வாசத்தில், தலை வலிக்கவும் சுற்றவும் ஆரம்பித்துவிட்டது

இதனால் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில் சென்று கொண்டு இருந்த எனது வண்டி தொடர்ந்து பின் தங்கி 11வது இடத்தை அடைந்தது. இதில் எனக்கு ஆறுதலான விசயம் என்னவென்றால் எனக்கும் அடுத்தபடியாக 12 வது இடத்திலும் ஒரு கார் வந்திருந்தது. 


இவ்வாறு முதல் சுற்றில் பதினோராவது இடத்துடன் விட்டால் போதுமடா சாமி என்று ஓடிவந்த எனக்கு மேலும் ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. அது கோமதி கார் ஓட்ட விருப்பமில்லை என்றும், இரண்டாவது சுற்றுக்கும் என்னையே போ என்றும் அனுப்பிவிட்டார். கார்த்திக்கோ இரண்டாவது சுற்று கண்டிப்பாக போயே ஆக வேண்டும் என்று கூறிவிட்டான். அதனால் வேறு வழி இல்லாமல் இரண்டாவது சுற்றுக்கும் அவனை அழைத்துக் கொண்டு சென்றேன்.

இரண்டாவது சுற்றில் தொடக்கம் முதலே காரினை மெதுவாகவே செலுத்தினேன். கார்த்தி வேகமாக போ வேகமாக போ என்கிறான்; ஆனால் வேகமாக போனால் என்னுள் இருக்கும் வாந்தி வேகமாக வெளியில் வந்து விடும் போல் இருந்ததால், நான் ஆக்ஸிலரேட்டரை மிகவும் மெதுவாகவே செலுத்தினேன். நான் வண்டியை மிகவும் வெகுதுவாக செலுத்தியதால் வெறுப்படைந்த கார்த்திக்கின் முகபாவனை மற்றும் உடல் பாகனை ஏண்டா இவனுடன் காரில் வந்தோம் என்று சொல்லாமல் சொல்வதாக அமைந்தது.

இந்த சுற்றில் நான் பதினோராவது இடத்தில் இருந்து முன்னேறி பத்தாவது இடத்தை வந்தடைந்தேன்.  ஆனால் அந்த சுற்றில் பங்கேற்ற மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 10 என்பதால் எனக்கு பத்தாவது இடம் கிடைத்தது. இல்லை என்றால் இன்னும் பெரிய இலக்கத்தில் இடம் கிடைத்திருக்கும். 


இவ்வாறு எங்கள் Go-Karting சவாரி ஒரு வழியாக முடிவுக்கு வந்தது எனக்கு பெருத்த நிம்மதி.  சவாரி முடிந்ததும் இயற்கை அன்னையின் அழைப்புக்கு செவிசாய்க்க கழிவறை நோக்கி ஓடினோம். அங்கே ஓர் வினோதம் எங்களுக்கு காத்திருந்தது. அங்கிருந்த அனைத்து கழிப்பறைகளும் கண்ணாடி சுவற்றினால் செய்யப்பட்டிருந்தது. 

அதில் என்ன வினோதம் என்றால் உள்ளிருந்து பார்த்தால் வெளியில் இருக்கும் யாவையும் தெளிவாகத் தெரிவது போலவும், வெளியில் இருந்து பார்த்தால் உள்புறம் ஏதும் தெரியாதது போலவும் அமைக்கப்பட்டு இருந்தது.  இது போன்ற அமைப்பை வீட்டு கண்ணாடி சுவற்றில் முன்பே பார்த்திருந்தாலும், கழிவறையில் காண்பது இதுவே முதல் முறை.


என்னதான் வெளியில் இருந்து பார்த்தால் உள்ளே தெரியாது என்றாலும் அவ்வாறான ஒரு அமைப்பில் நமக்கு இயற்கை உபாதைகளை கழிக்க கொஞ்சம் வெட்கமாகவும் அருவருப்பாகவுமே இருந்தது. 

அதை முடித்துவிட்டு வெளியில் வரும்போது பார்த்தால், இசைக்கருவிகளை கழிப்பறையின் சுவற்றில் மாட்டி வைத்திருந்தார்கள். ஆனால் அருகில் சென்று பார்க்கும் பொழுது தான் தெரிந்தது அது இசைக்கருவிகள் அல்ல ஆண்கள் பயன்படுத்தும் Urinals என்பது. 
 



ஆனால் இதன் சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது நீங்கள் கழிக்கும் சிறுநீரின் வேகத்திற்கு ஏற்ப அந்த கருவிகளில் இருந்து இசையும் உங்களுக்கு கேட்கிறது. அடக்கிய சிறுநீரை வெளியேற்றுவதே இன்பம் என்றால், அதனை இசையுடன் வெளியேற்றுவது பேரின்பம் தான். 

உங்களுக்கு சிறுநீர் வரவில்லையா? ஆனாலும் இசையை கேட்டு ரசிக்க ஆர்வமாக உள்ளீர்களா? கவலை வேண்டாம்! உங்களுக்காகவே சிறிய பாட்டில்கள் வைத்துள்ளார்கள். அதில் தண்ணீர் நிரப்பி, நீங்கள் அந்த யூரினல்ஸ் மீது பீச்சியடித்து, அந்த இசையை கேட்டு ரசிக்கலாம் 😂😂.

இவ்வாறு Highlands Motor Park இடத்தில் எங்கள் பயண அனுபவம் புதுமையாகவும் சிறப்பாகவும் அமைந்தது. மேலதிக தகவல்களுக்கு இந்த இணைய தளத்தை பார்க்கவும், https://www.highlands.co.nz/ 

வழியில் Clyde Dam என்ற அணைக்கட்டை பார்த்துவிட்டு, மாலை நெருங்கும் நேரம் Dunedin நகரத்தில் நாங்கள் முன்பதிவு செய்திருந்த தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்தோம். அந்த இடத்தின் பெயர் Dunedin Village. அந்த இடம் அங்குள்ள  ஓடாகோ பல்கலைக்கழகத்தில்(University of  Otago) பயிலும் மாணவர்கள் தங்குவதற்கென்று வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டிடம். நாங்கள் சென்றது வருட இறுதி என்பதால், மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டோ, அல்லது விடுமுறையிலோ சென்றிருந்ததால், அந்த கட்டிடத்தின் அறைகளை சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விட்டிருந்தனர்.


எங்கள் அறைக்குச் சென்று குளித்து தயாரான பிறகு, Otago Peninsula விற்கு செல்வது என்று முடிவெடுத்தோம். செல்லும் வழியில் Larnach Castle சென்று விட்டு செல்வது என்றும் முடிவானது.

Peninsula செல்லும் வழி மிகவும் அழகாக இருந்தது. ஒருபுறத்தில் கடலும், ஒரு புறத்தில் மலையும், என நடுவில் வாகனத்தை செலுத்துவதற்கு நன்றாக இருந்தது. நாம் மெல்போனில் பலமுறை Great Ocean Road சென்றிருக்கிறோம். அங்கே Lorne முதல் Apollo Bay வரை உள்ள சாலை, இந்த ஒட்டகோ பினின்சுலாவை போலவே, ஒரு புறத்தில் பசிபிக் பெருங்கடலும், மறுபுறத்தில் Otway National Park மலைத்தொடரும் அமைந்திருக்கும். ஆனால் Great Ocean Road உடன் ஒப்பிட்டால், இந்த பெனின்சுலா சாலை அத்துணை சிறப்பாக இல்லாவிட்டாலும், நிச்சயம் ஒரு புது அனுபவமாகவே இருக்கும்.

Larnarch Castle சென்றடைந்தபோது, மாலை ஐந்தரை மணிக்கு மேல் ஆகிவிட்டதால் அவர்கள், அதனை மூடிவிட்டு இருந்தனர். அதனால் ஏமாற்றத்துடன் பெண்ணின் சுலாவில் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.

45 நிமிட பயணத்திற்கு பிறகு நாங்கள் சென்றடைந்த இடம் Albatross என்ற பறவைகளுக்கென்று அமைந்திருக்கும் ஆராய்ச்சி நிலையமான, Royal Albatross Centre. அவர்கள் அந்தப் பெனின்சுலாவில் சுற்றுலாப் பயணிகளை சுற்றுலா அழைத்துச் செல்கின்றனர், அந்த நிலையத்தில் albatross பறவைகள் குறித்து காணொளி காட்சிகளும் திரையிடுகின்றனர்.  

ஆனால் நாங்கள் அதற்கு முன்பதிவு செய்திருக்கவில்லை; அதனால் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அந்த நிலையத்தைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ள albatross பறவைகளைப் பார்த்து ரசித்தோம், அங்குள்ள கடற்கரையில் சீல் விலங்குகள் விளையாடிக் கொண்டிருந்ததையும் பார்த்து ரசித்தோம்.




இவ்வாறாக எங்களின் Otago Peninsula பயணத்தை முடித்துக் கொண்டு எங்களின் தங்கும் அறைக்கு வந்து சேர்ந்தோம். இன்றைய பொழுது இனிதே முடிந்தது நாளை Dunedinல் உள்ள சில இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு தொடர்ந்து பயணிக்கவிருக்கிறோம்.

Wednesday, May 14, 2025

நியூசிலாந்து பயணம்! - Day 11

04-Jan-2023 :  எங்களுடைய இன்றைய பயணத் திட்டத்தின் படி வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு இடத்திற்கு சென்றோம். 

கவாறு தொங்கு பாலம்

இந்த இடத்தின் பெயர் கவாறு தொங்கு பாலம்(Kawarau Suspension Bridge). அதாவது இந்த இடத்தில் தான் உலகிலேயே முதன் முதலாக பொதுமக்கள் பங்குபெறும் பஞ்சி ஜம்பிங்(Bunjee Jumping) விளையாட்டு தொடங்கப்பட்டது. AJ Hackett மற்றும் Henry van Asch இணைந்து இந்த பஞ்சி ஜம்பிங் விளையாட்டினை 1988 ஆம் ஆண்டு கவாறு தொங்கு பாலத்தில் தொடங்கினர்; அதனால் இந்த இடம் பஞ்சி ஜம்பிங்கின் பிறப்பிடம் என்று அழைக்கப்படுகிறது.

இந்தப் பாலம் கவரு ஆற்றின் மீது 43 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளதால், அந்த ஆற்றின் பெயரைக் கொண்டே அழைக்கப்படுகிறது. உலகிலேயே மிக உயரமான வர்த்தக பஞ்சி ஜம்பிங் வசதி சீனாவின் Zhangjiajie Glass Bridge ல் அமைந்துள்ளது, இது 370.25 மீட்டர் (1,214 அடி 8 அங்குலம்) உயரத்தில் உள்ளது.

இந்த இடம் நாங்கள் தங்கி இருக்கும் இடத்திலிருந்து வெறும் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கவாறு பாலத்திற்கு செல்லும் வழியில் ஒரு அழகான ஏரி(Lake Hayas) அமைந்திருந்தது அந்த ஏரியில் சிறிது நேரம் காலாற நடந்து விட்டு நாங்கள் கவறு பாலத்தை அடைந்தோம்.



பஞ்சி ஜம்பிங் என்பது, ரப்பரால் ஆன கயிற்றை காலில் கட்டிக் கொண்டு அந்த கயிற்றின் மறுமுனையை, நிலையான ஒரு கம்பத்தில் கட்டிவிட்டு, தலைகீழாக குதிப்பதாகும். 

கவாரு பாலத்தில் இரண்டு விதமாக குதிப்பதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். ஒன்று, குதிக்கும் பொழுது கீழே ஓடும் ஆற்றின் நீர் பரப்பை சென்று அடையாமல் குதிப்பது; மற்றொன்று குதிக்கும் பொழுது கீழே ஓடும் ஆற்று நீரினுள் உங்கள் தலை மூழ்குமாறு குதிப்பது. நாங்கள் மூன்றாவதாக ஒருவிதத்தை கேட்டோம். அதாவது காலில் கயிறு கட்டாமல் குதிக்க முடியுமா என்று கேட்டோம். அவ்வாறெல்லாம் குதிக்க அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டதால் நாங்கள் குதிக்கவில்லை 😁😁

பஞ்சி ஜம்பிங் விளையாட்டு என்பது சில ஆபத்துகளை கொண்டிருக்கும். நாங்கள் நியூசிலாந்து பயணத்திற்கு ஆயத்தமாகி கொண்டிருக்கும் பொழுதே பஞ்சி ஜம்பிங் விளையாட்டு குறித்த சில காணொளிகளை கண்டோம். அதில் ஒரு காணொளியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண்மணி Zambia இல் பஞ்சி ஜம்பிங் செய்யும்பொழுது கயிறு அறுந்து ஆற்றினுள் விழுந்து விட்டார். ஆனால் அவருக்கு நீச்சல் தெரியும் என்பதால் லேசான காயங்களுடன் உயிர் தப்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தேறினார்.  

இது போன்ற விபத்துக்கள் ஒரு பக்கம் என்றால்,  காலில் கட்டப்பட்டுள்ள கயிறு, நீங்கள் தலைகீழாக குதிக்கும் பொழுது, உங்களை கீழ்நோக்கி இழுக்கும் என்பதால், உங்களுக்கு முதுகு தண்டுவடத்தில் முன்பே ஏதாவது பிரச்சனை இருந்தால் அது மேலும் தீவிரமடையலாம்; உங்களுக்கு ஏதாவது புதிதாக முதுகுத்தண்டுவடத்தில்  பிரச்சனை வரவும் வாய்ப்பு இருக்கிறது என்று அங்கே எச்சரிக்கை பலகை வைத்திருந்தனர். இவை இரண்டின் காரணமாக நாங்கள் பஞ்சி ஜம்பிங்  செய்வதில்லை என்று முடிவெடுத்தோம்.  அது மட்டும் இல்லை என்றால் நீங்கள் அதை அறுத்து தள்ளி இருப்பீர்கள் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.

ஆனால் அதே இடத்தில் ஜிப்லைன் விளையாட்டையும் அமைத்திருந்தனர். அந்த விளையாட்டை விளையாடி பார்ப்பது என்று முடிவெடுத்தோம். ஜிப்லைன் விளையாட்டினை நானும் கோமதியும் இணைந்து விளையாடினோம். கோமதி சூப்பர் வுமன் போல குப்புற படுத்துக் கொண்டும், நான் வவ்வால் போல தலைகீழாக தொங்கிக் கொண்டும் அந்த விளையாட்டை விளையாடினோம்.

நாங்கள் இருவரும் சேர்ந்து விளையாடிய போது எடுத்த போட்டோ எங்கேயோ தவறிவிட்டது. அதிலும் நான் தலைகீழாக தூங்கிக் கொண்டு செல்லும் பொழுது எனது கைகளைக் கொண்டு தொங்கு கயிற்றைப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை, என்பது தெரியாமல் அதனை பிடித்துக் கொண்டே சென்றேன். எனக்குப் பிறகு விளையாடிய ஒருவர், அவ்வாறு தலைகீழாகச் செல்லும் பொழுது கைகளை அகல விரித்துக் கொண்டு சென்றார். அப்பொழுதுதான் நான் தவறாக விளையாடியது எனக்கு தெரிந்தது. அதனால் அந்த விளையாட்டை நான் மீண்டும் விளையாடுவது என்று முடிவு செய்தேன். ஆனால் கோமதிக்கு மீண்டும் விளையாட விருப்பமில்லை.

Arrowtown Chinese Settlement

ஆனால் மீண்டும் விளையாடுவதற்கு முன்பு, நாம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஏரோ டவுன் சீனர்கள் குடியிருப்புக்கு சென்றோம்.



🏮 வரலாற்றுப் பின்னணி:
  • 1860களில், பெரும்பாலும் சீனாவின் குவாங்டாங் (Guangdong) மாகாணத்திலிருந்து வந்த சீன தங்க சுரங்கத் தொழிலாளர்கள், ஆஸ்திரேலியாவிலிருந்து பின்னர் நியூசிலாந்துக்கு அழைக்கப்பட்டனர்.
  • அவர்கள் பெரும்பாலும் வெள்ளையர்களால் பாகுபாடு காட்டப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் நகரத்தின் எல்லைகளில் வாழ்ந்தனர்.
  • கடுமையான சூழ்நிலைகளுக்கு மத்தியில், அவர்கள் சுயமாக எளிமையான குடியிருப்புகளை கட்டி சிறு சமூகமாக வாழ்ந்தனர்.

📍 இன்று காணக்கூடியவை:
  • மீளமைக்கப்பட்ட கல் குடியிருப்புகள்: அக்கால சீனர்கள் வாழ்ந்த சில குடியிருப்புகள் இன்று வரை பாதுகாக்கப்பட்டு இருக்கின்றன.
  • தகவல் பலகைகள்: அங்கு வாழ்ந்த சில நபர்களின் வாழ்க்கைச் சுருக்கங்களை விவரிக்கின்றன.
  • அழகான இயற்கை சூழல்: இந்த குடியிருப்பு புஷ் கிரீக் (Bush Creek) என்ற நீரோடையின் கரையில் அமைந்துள்ளது. அமைதியான சூழ்நிலையில் நடைபயணிக்க இது சிறந்த இடம்.

🧭 ஏன் செல்ல வேண்டும்?

  • இது பழைய சீன குடியாளர்கள் எதிர்கொண்ட கடுமையான சூழ்நிலைகளுக்கும் அனுபவங்களுக்குமான நினைவகம்.
  • நியூசிலாந்தின் பன்முகமான சமூக வரலாற்றை புரிந்து கொள்ள உதவும்.
  • இது இலவசம் மற்றும் திறந்த வெளி மியூசியமாகவும் செயல்படுகிறது; உங்கள் விருப்பப்படி சுற்றிப் பார்க்கலாம்.
  • மதிய உணவு உட்கொள்ள அங்கு, பல உணவகங்கள் உள்ளன. ஆனால் விலை சற்று அதிகம் தான்
மீண்டும் கவாரு வேண்டும் கவாரு:

மீண்டும் ஜிப்லைன் விளையாட்டை விளையாடுவதற்கு என்று கவரு தொங்கு பாலத்தை அடைந்தோம். அங்கு நான் மட்டும் அந்த ஜிப்லைன் விளையாட்டை விளையாடினேன். இம்முறை தலைகீழாக தொங்கும் பொழுது, கைகளை எதையும் பிடித்துக் கொண்டிருக்காமல், அகல விரித்தபடி விளையாடியதால் உற்சாகம் அதிகமாக இருந்தது


நான் விளையாடிய போது எடுத்த வீடியோவில் இருந்து ஒரு பிரேமை எடுத்து போட்டோவாக கொடுத்துள்ளேன். கீழே உள்ளது விளையாடி முடித்த பிறகு எடுத்த போட்டோ.


கவரு ஆறு இரண்டு மலைகளுக்கு இடையேயான பள்ளத்தாக்கின் ஊடே செல்லும் அழகு, அந்த ஆற்றின் பச்சை நிறத்தால் மேலும் மெருகேறியது என்று கூறினால் தவறில்லை. அதனால் மதியம் வரை அங்கே நிறைய நேரம் செலவழித்தோம். நிறைய பேர் பஞ்சி ஜம்பிங் சாகச விளையாட்டு விளையாடியதை பார்த்து ரசித்தோம்.

Queenstown Garden

அதற்குப் பிறகு எந்த ஒரு விளையாட்டுக்கோ, சாகசங்களுக்கோ நாங்கள் முன்பதிவு செய்து இருக்கவில்லை. அதனால் நாங்கள் குயின்ஸ் டவுன் தோட்டத்தில்(Queenstown Garden) காலாற நடந்தோம், கார்த்திக் அங்கிருந்த பூங்காவில் விளையாடினான். தோட்டத்தின் ஒரு புறத்தில் அமைந்திருந்த ஏரியில் கால் நனைத்தோம்.


அதற்குள் மாலையாகி விட்டது; நாங்கள் குயின்ஸ் டவுன் நகரத்திற்குச் சென்று, அங்கே அமைந்திருந்த கடைகள், உணவகங்கள், நினைவுப் பரிசு வாங்கும் இடம் ஆகியவற்றை சுற்றிப் பார்த்தோம். நகரத்தினுள் உலகப் பிரசித்தி பெற்ற பர்கர் கடை ஒன்று இருக்கிறது; அதன் பெயர் பெர்க் பர்கர்(Ferg Burger).


அந்த சுவையான பர்கர்க்காக, மக்கள் எப்பொழுதும் அந்த கடையின் முன் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். இன்றும் அங்கே கூட்டம் அதிகமாக இருந்ததால், நாம் இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று நாங்கள் அன்று அங்கு வாங்கி உண்ணவில்லை. 

அதன் பின்னர் வீட்டுக்குச் சென்று நாங்கள் எங்கள் உடமைகளை பேக் செய்தோம். ஏனென்றால் நாளை காலை குயின் டவுனில் இருந்து புறப்பட இருக்கிறோம். அடுத்த மூன்று நாட்கள், டியூனீடின்(Dunedin) மற்றும் டீமாரு(Timaru) நகரங்களை சுற்றி விட்டு மீண்டும் குயின்ஸ் டவுன் வந்து சேருவோம். டியூனீடின்நகரத்தில் ஒருநாளும், டீமாரு நகரத்தில் ஒருநாளும் தங்குவதற்கு ஹோட்டல்கள் ஏற்கனவே முன் பதிவு செய்து வைத்திருந்தோம். மூன்று நாளைக் காண இந்த பயணம் ஒரு வட்டன் சுற்றிப் பாதையாக அமையும்.


இந்த மூன்று நாள் பயணத்தின் நோக்கம் என்பது நியூசிலாந்தின் தென் தீவில் உள்ள நகரங்களை சுற்றி வருவது மட்டுமே. மற்றபடி அங்கே பார்ப்பதற்கு ஆகச் சிறந்த இடங்கள் என்று ஒன்றும் இல்லை. வாருங்கள் என்னுடன் தொடர்ந்து பயணிப்போம்.

Monday, May 05, 2025

நியூசிலாந்து பயணம்! - Day 10

03-Jan-2023: இன்று நாங்கள் ஒரே ஒரு இடத்திற்கு மட்டும் சென்றுவர திட்டமிட்டு இருந்தோம். அந்த ஒரு இடம் மட்டுமே நாங்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து நான்கு மணி நேர பயணத் தொலைவில் இருந்தது. அது நாங்கள் எங்கேயும் வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ச்சியாக செலுத்தினால் சென்றடைய ஆகும் காலம் இதுவே உணவு இடைவேளை, இயற்கை பாதைகளுக்கான இடைவேளை என்று வாகனத்தை நிறுத்தினால் இன்னும் கூடுதலான நேரம் ஆகும்.  அந்த இடத்தின் பெயர் மில் போர்டு சவுண்ட் (Milford Sound).


Glenorchy-ல் இருந்து குறுக்காக ஒரு வழி அமைத்திருந்தால், பயண நேரம் வெகுவாக குறைந்திருக்கும். ஆனால் நாங்கள் வட்டன் சுத்தி வழியிலேயே சென்றடைய வேண்டி இருந்ததாலும், உணவு இடைவேளைக்கும், மற்ற இடைவேளைகளுக்கும் நேரம் எடுத்துக் கொண்டதாலும் மொத்த பயண நேரம் ஐந்தரை மணி நேரம் ஆனது.

பயணத்தின் தொடக்கத்தில் சிறிது நேரத்திற்கு, Glenorchy செல்லும் வழியில் இருக்கும் வக்கட்டிப்பு(Lake Wakatipu) ஏரியின் அருகிலேயே பயணிப்பதால், அந்த ஏரியின் அழகை மீண்டும் ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து மலைகளின் ஊடே பயணித்து, மீண்டும் ஒரு ஏரியின் அழகை காணும் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஏரியின் பெயர் லேக் அனவு(Lake Anau)

இறுதியாக Milford Sound சென்றடைந்தபோது மதியம் ஒன்றரை மணி. நாங்கள் இரண்டு மணிக்கு, படகு சவாரி ஒன்றை முன் பதிவு செய்திருந்தோம். அவசர அவசரமாக, இயற்கை உபாதைகளை முடித்துவிட்டு, மதிய உணவையும் உண்டு முடித்துவிட்டு படகில் சென்று அமர்ந்தோம். அது ஒரு 90 நிமிட படகு சவாரி. படகில் செல்லும்போது இயற்கை காட்சிகளை கண்டு ரசித்துக்கொண்டே செல்லலாம் என்றனர். 

ஆனால் அங்கு அமைந்திருந்த காட்சிகள் ஒன்றும் அபாரமாக இருக்கவில்லை. ஒரு சாதாரண அழகையே கொண்டிருந்தன. படகு சவாரி முடிந்து திரும்பியதும் கார்த்திக் கேட்டது, இந்தப் படகு சவாரிக்காக நாம் இவ்வளவு தொலைவு காரில் பயணம் செய்து வந்தோம்? இதற்கு வீட்டிலேயே இருந்திருக்கலாம் என்றான்.



படகு சவாரியில் சிற்றுண்டி வாங்கி சாப்பிட்டோம். சவாரியை முடித்துக் கொண்டு மீண்டும் 5 மணி நேரம் காரில் பயணம் செய்து வீட்டினை அடைந்தோம். வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் பயணக் களைப்பு தீர, ஜக்கூசியில் சுடுநீர் குளியல் எடுத்துக் கொண்டோம். 


இந்த நாள் நிறைவடைந்தது, ஆனால் ஒன்றும் நிறைய இனிமையாக இருக்கவில்லை.