DreamLand

Monday, July 01, 2019

பயணக்குறிப்பு 27-ஜூன்-2019



இன்றைய பயணம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னிலிருந்து, டவுன்ஸ்வில் நகரத்தை நோக்கி. இடையில் பிரிஸ்பேன்  நகரத்தில் 1 மணி நேரம் காத்திருப்பு. மெல்போர்னிலிருந்து பிரிஸ்பேன் இரண்டு மணி நேரப்பயணம், பிரிஸ்பேனில் இருந்து டவுன்ஸ்வில் இரண்டு மணி நேரப்பயணம்.

காலை 4:45 மணிக்கு வீட்டிலிருந்து தொடங்கிய பயணம் மதியம் 12:30 குத்தான் முடிவுற்றது. காலை 6 மணிக்கு புறப்படவேண்டிய விமானத்தின் சக்கரம் பழுதடைந்ததால், புதிய சக்கரம் மாற்றிவிட்டு கிளம்ப 1.5 மணி நேரம் கூடுதலாக ஆகிவிட்டிருந்தது. கெட்டதிலும் ஒரு நன்மையாக, அதே விமானம் பிரிஸ்பேனில் இருந்து டவுன்ஸ்வில்லும் செல்வதால், இணைப்பு விமானத்தை தவறவிடுவோம் என்ற கவலை இல்லை.

எப்பொழுதும் தூங்கி வழிந்துகொண்டோ, கைபேசியை நோண்டிக்கொண்டோ செல்லும் நான் இம்முறை வழித்துணையாக புத்தகங்களை எடுத்து வந்திருந்தேன். தமிழ் புத்தகங்கள்! மெல்போர்ன் நகரில் விமானம் ஏறி அமர்ந்ததும் ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்க தொடங்கிவிட்டேன். விமானம் மேலெழும் நேரத்தில்தான் சக்கரத்தின் பழுது தெறியவந்ததால் அனைவரையும் விமானத்திலேயே அமரவைத்துவிட்டு, சக்கரத்தை மாற்றினார்கள். நான் புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தேன்!

1 1/2 மணி நேரத்திற்கு பிறகு விமானம் கிளம்பியது. நான் அப்பவும் புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தேன்! என்னருகில் ஒரு நடுத்தர வயதுடைய சீன பெண்மணி ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் சற்று நேரத்திற்குள்ளாக உறங்கிவிட்டிருந்தார். நான் அப்பவும் புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தேன்!

மீண்டும் ஒரு அரைமணிநேரம் கழிந்தபிறகு, இயற்கை அன்னையிடமிருந்து அழைப்பு வந்தது. என்னருகே அமர்ந்திருந்த சீன பெண்மணியையும், அவருக்கு அடுத்ததாக அமர்ந்திருந்த ஒருவரையும் எழுப்பிவிட்டு சென்றால், ஓய்வறைக்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது! விமானத்தில் ஏறியமர்ந்து 2 மணி நேரம் ஆகிவிட்டபடியால் இயற்கை அன்னை, அனைவரையும் ஒருசேர அழைத்திருக்கிறார் போலும்! சற்றுநேர காத்திருப்புக்கு பிறகு இயற்கை அன்னையின் அழைப்பை பூர்த்திசெய்துவிட்டு இருக்கைக்கு திரும்பினேன்.

சாளரத்தினோர இருக்கையில் சாதகங்களும் உண்டு பாதகங்களும் உண்டு. இரண்டுபேரைத் தாண்டித்தான் வெளியேறவும் முடியும், உள்நுழையவும் முடியும்! இயற்கை அன்னையின் அழைப்பை பூர்த்திசெய்ய சிறிது கூடுதல் நேரம் ஆகிவிட்டிருந்தபடியால் அந்த சீன பெண்மணி மீண்டும் உறங்கிவிட்டிருந்தார்! அவரை தொந்தரவு செய்து எழுப்பிவிட்டு என் இருக்கையில் வந்தமர்ந்தேன்.

இன்னும் ஒருமணி நேர பயணம் மீதமிருப்பதால், புத்தகத்தினுள் தொலைந்துவிடலாம் என்று எத்தனித்தேன்.

'மன்னிக்க வேண்டும். நான் உங்களிடம் ஒன்று கேட்கலாமா ?' என்று ஆங்கிலத்தில் கேட்டார் அந்த சீன பெண்மணி.

'நிச்சயமாக'.

'இது இந்தி மொழியில் உள்ள புத்தகமா?'

'இல்லை, இந்த புத்தகத்தில் உள்ள மொழி தமிழ்'

'தமிழ் இந்தியாவில் பேசப்படுகிறதா? நான் அனைவரும் இந்தி பேசுபவர்கள் என்று எண்ணியிருந்தேன்!'

'பெரும்பான்மையான மக்களால், வட இந்தியாவில் பேசப்படும் மொழி மட்டுமே இந்தி. ஆனால் இந்தி மட்டுமே இந்தியாவின் மொழி அல்ல!'

'அப்படியா ? தமிழ்மொழி எத்துணை பேர் பேசுகிறார்கள்?'.

எனது மாநிலத்தில் மட்டும் 7 1/2 கோடி பேர் தமிழ் பேசுபவர்கள் உள்ளனர் என்று தொடங்கி...

இந்தியாவில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை, அலுவலக மொழிகளின் எண்ணிக்கை வழியே சென்று...

இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பற்றிய விமானம் ஏறி...

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா மற்றும் இதர நாடுகளில் பல தலைமுறைகளாக வசித்துவரும் தமிழினூடே பயணித்து....

இந்தியாவில் இந்தி எவ்வாறு மற்ற மொழிகளை ஆக்கிரமிக்கின்றது, அதை தொடர்ந்து நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்ற தளத்தில் இறங்கினேன்.

மிகவும் ஆர்வமாக கேட்டுக்கொண்ட அவர், 'தமிழ் மொழியின் வயது என்ன? அது எப்போதிருந்து வழக்கத்தில் இருக்கிறது?' என்றார்.

'5000 ஆண்டுகள் இருக்கலாம் என்கிறார்கள்! அது சரியானதா என்று எனக்கு தெரியாது. ஆனால், உலகின் பழமையான மற்றும் இன்றும் பழக்கத்தில் உள்ள மொழிகள் என்று கூகுளில் தேடினால், உங்களின் மாண்டரின்(Chinese) மற்றும் எங்கள் தமிழ் இரண்டும் அதில் இடம் பெற்றிருக்கும்! அவசியம் நீங்கள் ஒருமுறை தேடி பாருங்கள்!' என்று கூறிவிட்டு முடிந்தது அந்த உரையாடல். இடையில் சீனாவை பற்றியும் நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

நிகழ்வு பொருத்தம்(Coincidence):

நான் படித்துக்கொண்டிருந்த புத்தகம் ஆர்.முத்துகுமார் எழுதிய 'மொழிப்போர்' என்ற புத்தகம். இந்தி திணிப்பை எதிர்த்து திராவிடர்கள் செய்து கொண்டிருக்கும் போராட்டங்களை பற்றிய சுருக்கமான வரலாறு!

0 Comments:

Post a Comment

<< Home