DreamLand

Sunday, July 07, 2019

பயணச் சீட்டு... 08-Jan-2019

பயணச் சீட்டு... 08-Jan-2019

பயணம் ஒவ்வொருவரது வாழ்விலும் எவ்வளவு தவிர்க்க முடியாத  அங்கமாகிவிடுகிறது. சுற்றுலாவுக்காக, குடும்பம் அல்லது உறவினர்களை சந்திக்க, அலுவலக நிமித்தமாக என எண்ணற்ற குறிக்கோள்களுடன் அல்லது குறிக்கோள்கள் ஏதுமற்ற தேடலுக்கான பயணங்கள். இனிமையானவை பல, இன்னல்கள் நிறைந்தவை சில, துயரங்களில் முடிவது சிற்சில! ஆனால் அந்த பயணங்கள் தரும் அனுபவங்களும் படிப்பினைகளும் நம் வாழ்நாளின் இறுதிவரை பயணித்து வருபவை!

எனது அப்பா தனது இளவயதில், 50 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கோவை நகரத்திற்கு சென்று ஒரேநாளில் 20 ருபாய் செலவுசெய்துவிட்டு வந்ததை இன்றுவரை நினைவு கூர்ந்து வருகிறார். எனக்கோ பள்ளியில் படித்துவந்த வரையில், கோவையிலுள்ள சித்தப்பா வீடு, திருப்பூரிலுள்ள அத்தையரின் வீடு, கொடிவேரி அருகேயுள்ள சதுமுகையில் உள்ள பாட்டி வீடு  தவிர்த்து பயணப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதிலும் பத்தாம் வகுப்பு முடிக்கும்வரை தனியாக பயணம் செய்யவெல்லாம் அனுமதியே கிடையாது.

நான் மேற்கொண்ட முதல் தொலைதூர பயணம் என்பது, சென்னையை நோக்கிய பயணம்! பன்னிரெண்டாம் வகுப்பு முடித்திருந்த மே மாதம், எனது அண்ணனின் திருமணத்திற்காக பெரியப்பா அனைவரையும் தொடர்வண்டியில் அழைத்து சென்றார். திருப்பூரில் இருந்து சென்னைக்கு 8 மணி நேரம் பிடிக்குமாம், அது இரவு நேரப்பயணம் என்பதால் படுக்கை வசதி கொண்ட தொடர்வண்டியில் முன்பதிவு செய்துள்ளாராம், இரவு முழுதும் உறங்கிக்கொண்டே செல்லலாமாம் என்று நண்பர்களிடம் பெருமை பீத்திவிட்டுச் சென்ற பயணம். குதூகலத்துடன் ஏறி அமர்ந்ததும் அப்பா கேட்டார், 'ஏண்டா, ரயிலில் இதுக்கு முன்னாடி போயிருக்கியா?'

அனைவர் முன்னிலையிலும் கேட்டுவிட்டதால் சற்றே அவமானமாக போய்விட்டது, அதனால்  கத்தவேண்டும் போலிருந்தது, 'நீ எங்கயாவது கூட்டிட்டு போயிருக்கியா?' என்று. ஆனால் எதிர்த்து பேசுவதெல்லாம் 'அப்பொழுது' வாடிக்கை இல்லையாதலால், 'இல்லை' என்ற ஒற்றை வார்த்தையில் என்னுடைய பதில் முடிந்தது.

ஆனால் இன்றோ வெளிநாட்டில்...அலுவலக நிமித்தமாக ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களுக்கும் பயணிப்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. மாதம் ஒரு முறையாவது பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் பயணம் எனது மனைவிக்கு சிறிதும் பிடிப்பதில்லை...ஆம் அவரையும், மகனையும் விட்டுவிட்டு நான் தனியாக மேற்கொள்ளும் பயணம் அவருக்கு சிறிதும் பிடிப்பதில்லை.

இதோ நேற்று(07Jan2019) மெல்போர்னில் இருந்து சிட்னி நோக்கி அலுவலகரீதியாக வந்த வேலை முடிவடைந்து, இன்று(08Jan2019) மெல்போர்ன் திரும்புவதற்காக சிட்னி விமானநிலையம் வந்தடைந்தேன், எனது உடமைகளுடன். இங்கே நான் கொண்டுவந்திருக்கும் பையினை பற்றி கூறவேண்டும். ஒரேநாளில் முடியும் பயணம் என்றால் மடிக்கணினியை தோள்பையில் சுமந்து வருவது வழக்கம். இரண்டு நாள் பயணமாதலால், இரவு உடை, மறுநாளுக்கான உடைகளை எடுத்து வருவதோடு மட்டுமல்லாமல், திரும்பிவரும்போது என் வீட்டு தலைவருக்கான தின்பண்டங்களையும் வாங்கி வரவேண்டுமென்பதால் இரண்டு வழிகளில் பயன்படுத்தவல்ல ஒரு பையினை எடுத்து வந்திருந்தேன். அதாவது, சுமை குறைவாக இருந்தால் தோளில் சுமந்து செல்லலாம். சுமை அதிகமாக இருப்பின், சக்கரங்களின் துணையுடன் இழுத்துக்கொண்டு செல்லலாம்.

நமது வாழ்க்கையை எளிதாக்க, நமது நேரத்தை பயனற்ற வழியில் செலவிடுவதை குறைக்க எண்ணற்ற இயந்திரங்கள் கண்டுபிடிக்க பட்டிருந்தாலும், அவற்றில் இந்த சக்கரங்கள் முன்னோடியானவை என்பது என் தாழ்மையான கருத்து! இரண்டு நாள் பயணமுடிவில் எனது பையின் சுமை கூடியிருந்ததால் அதன் கைப்பிடி பற்றி இழுத்துக்கொண்டே நடந்தேன்.

பாதுகாப்பு சோதனைக்காக வரிசையில் காத்திருக்கும் போதே, எனது மடிக்கணினியை வெளியே எடுத்து வைத்துக்கொண்டேன். பாதுகாப்பு சோதனையில் மடிக்கணினியை ஒரு தாம்பாளத்திலும், பணப்பை, அரைக்கச்சு(Belt) மற்றும் கைபேசி ஆகியவற்றை மற்றொரு தாம்பாளத்திலும் வைத்து, எனது பையினையும் சேர்த்து சோதனை இயந்திரத்தினுள் அனுப்பிவிட்டு, நானும் சோதனை வாயிலின் வழியாக மறுபுறம் சென்றேன்.

எனது உடமைகளை எடுப்பதற்காக காத்துக்கொண்டிருந்த வேளையில், எனது பையினை மீண்டும் பரிசோதிக்க வேண்டுமென அதிகாரி கூறிவிட, அங்கே பணியிலிருந்த மற்றோர் அதிகாரி எனது பையினை எடுத்துக்கொண்டு, பரிசோதனை இயந்திரத்தினுள் மீண்டும் அனுப்பும் பொருட்டு மறுபுறம் சென்றார். நான் தின்பண்டங்களைத்தானே எடுத்து வந்தேன், தீப்பற்றும் பொருள்கூட எதுவும் எடுத்து வரவில்லையே என்று சற்றே அச்சத்துடன் காத்திருந்த வேலையில் கவனித்தேன்,

எனக்கு அருகாமையில் உள்ள வரிசையில் ஒரு இளவயது வெள்ளைக்கார பெண்மணி, பாதுகாப்பு வாயிலில் நுழையும்போது, அந்த வாயில் பீப் பீப் என்று சத்தமிட்டது...

தொடரும்...

0 Comments:

Post a Comment

<< Home